Thursday, December 27, 2012


மதுரை காமராஜ் பல்கலையில் 176 "கிளார்க்' பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள 176 "கிளார்க்'குகள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப, பத்து ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, அரசு ஒதுக்கீடு அடிப்படையில் 176 "கிளார்க்'குகள், வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர்கள் 35 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப, பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிளார்க் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையின் இளங்கலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். வாட்ச்மேன் துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர் பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதித்தேர்வு, நேர்காணல் மற்றும் அரசு ஒதுக்கீடு அடிப்படையில் நிரந்தர பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும், என பல்கலைப் பதிவாளர் தெரிவித்துள்ளார். கோரிக்கை: இப்பல்கலையில் 100 கிளார்க்குகள், துப்புரவு மற்றும் தோட்டப்பணியாளர்கள், 8 ஆண்டுகளாக தற்காலிக பணியில் உள்ளனர். தேர்வு மூலம் நிரந்தர பணியிடங்களை நிரப்ப பல்கலை நிர்வாகம் எடுத்த முடிவால் அந்தப் பணியாளர்கள், துணைவேந்தர் கல்யாணியை சந்தித்தனர். ""பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியில் உள்ள தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,'' என வலியுறுத்தினர். துணைவேந்தர் கூறுகையில், ""அரசு ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பல்கலையில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்தவர்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.



பெண்ணை கொலை செய்து தற்கொலை என "செட்டப்' ஆயுள் தண்டனை உறுதி
மதுரை : கன்னியாகுமரி மூஞ்சிறையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, தூக்கில் தொங்கியது போல் "செட்டப்' செய்தவர்களுக்கு, கீழ்கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. 
திருநெல்வேலி வையகுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது மருமகள் மூஞ்சிறையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்தார். அவருக்கு துணையாக சுலோச்சனா தங்கியிருந்தார். 2009 மார்ச் 15 ல் இரவுப் பணிக்கு மருமகள் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் கழிப்பறையில் சுலோச்சனா 2 கைகள் கட்டப்பட்டு, தூக்கில் பிணமாக தொங்கினார். கால்கள் தரையை தொட்டபடி இருந்தன. அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை. மொபைல்போன் மாயமாகியிருந்தது.தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். டம்ளரில் 2 பேரின் கைரேகைகள் பதிவாகியிருந்தன. அது, சுலோச்சனாவின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை. 
சின்னத்தம்பி (எ) "அருவா' சின்னத்தம்பி, பெரியாண்டவர் நகைக்காக கொலை செய்து, வழக்கை திசை திருப்பவே தற்கொலை நாடகம் நடத்தியது தெரிந்தது. பெரியாண்டவர் சரணடைந்தார். கொள்ளையடித்த நகைகளை, போலீசார் மீட்டனர். சின்னத்தம்பி, பெரியாண்டவர் கொலை செய்து, தடயங்களை மறைத்த குற்றத்திற்காக, தலா 10 ஆண்டு சிறை மற்றும் ஆயுள் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க, நாகர்கோவில் செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து பெஞ்ச் உத்தரவு: எந்த ஒரு பெண்ணும், கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தூக்கில் தொங்குவது சாத்தியமில்லை. தன்னைத்தானே கொலை செய்துகொள்ளவும் முடியாது. சுலோச்சனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது, என்றது. 



மதுரை கலெக்டர் ஆபீசில் திடீர் தீ விபத்து ஏன் ? முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின
மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் நள்ளிரவில் தீ பிடித்து எரிந்தது. காலையில் தான் தீ விபத்து வெளியே தெரிய வந்ததால் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இதனால் இந்த விபத்தில் சதிசெயல் ஏதும் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் மதுரையும் ஒன்றாக திகழ்கிறது. கோயில் நகரமான இங்கு சமீப காலமாக கிரானைட் முறைகேடு முக்கிய பிரச்னையாக இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. குறிப்பாக இவை அனைத்தும் வருவாய் துறை வசத்திற்குறியதால் இந்த துறை அதிகாரிகள் தான் ஆவணங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தீ பிடித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. 



காலையில் தான் தெரிந்தது:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பஸ்ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது. பல ஏக்கர் கணக்கில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மெகா பழமை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் மாடியில் நிர்வாக அலுவலர் ஏ என்ற பிரிவு அலுவலகம் செயல்பபட்டு வருகிறது. இங்கு குறிப்பாக ஊழியர்களின் சர்வீஸ் தொடர்பான விஷயங்கள் இந்த அதிகாரியின் கட்டுக்குள் இருக்கும். மேலும் நிலப்பட்டா வழங்குதல் , கான்ட்ராக்ட் பணி தொடர்பான ஆவணங்களும் இருந்ததாக தெரிகிறது. நள்ளிரவில் ஒரு மணியளிவில் திடீர் தீ பற்றி எரிந்துள்ளது. ஆனால் இந்த தீ எரிந்த விவரம் அதிகாலை 5 மணியளவில் தான் தெரியவந்தது. இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. நள்ளிரவில் பிடித்த தீயை காலை வரை யாருக்கும் தகவல் தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 


தீயை அணைத்தாலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் அலுவலர்கள் தொடர்பான விவரம் அழிந்து விட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஆவணங்களை அழிக்கும் நோக்கத்தில் யாரும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் துறை ரீதியான புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று தீ பிடித்த காரணம் குறித்து விசாரித்தார்.

சோகத்தில் அலுவலர்கள் ;

இங்கு அரசு அலுவலர்கள் குறிப்பாக தாசில்தார்களின் சர்வீஸ் பட்டியல் இங்கு அதிகம் இருந்ததாக தெரிகிறது. அலுவலர்ககளின் டிரான்ஸ்பர் , பதவி உயர்வு, அலுவலர்கள் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் இருந்தன. இந்த ஆவணங்கள் அழிந்து இருப்பதால் தமது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுமே என்ற சோகத்தில் அலுவலர்கள் மூழ்கியுள்ளனர்.


ஜாமீனில் வெளியே வந்த கொலை கைதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
பெரம்பூர், டிச. 27-

சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் பெரியசாமி (30). இவரும் இவரது அண்ணன் சேகரும் சேர்ந்து அதே பகுதி ரவுடி பாட்டில் மணியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி கொன்றனர்.

இந்த முன் விரோதம் காரணமாக பாட்டில் மணியின் கூட்டாளிகள் பெரியசாமியையும் சேகரையும் கொல்ல சதி திட்டம் தீட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். இதில் பெரியசாமி பிராட்வே பஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் மாமியார் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்தார்.

இதை நோட்டமிட்ட பாட்டில் மணியின் கூட்டாளிகள் 5 பேர் கொண்ட கும்பல் பெரியசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தலையில் பலத்த வெட்டு விருந்ததால் ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலையில் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேர் மீது புகார்பாட்னா, டிச. 27-

பீகார் மாநிலத்தில் விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள சோட்டி கேவாய் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த குட்டு யாதவ், அன்னு யாதவ், அர்ஜூன் யாதவ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தில் வயலுக்குச் சென்ற இளம்பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் அரிவா என்பவர் பலாத்காரம் செய்துள்ளார். குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.